
ஆலய வரலாறு
’ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்பது ஔவை வாக்கு. இவ்வாலயம் தொழுவது அதனினும் நன்று என்பதற்கு இவ்வாலயத்தின் சிறப்பே சான்று. சென்னை 91, மடிப்பாக்கம் சதாசிவம் நகரில் அமைதியாய் அமைந்து தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு மகிழ்வையும், மன நிறைவையும், நிம்மதியையும் குறைவில்லா வாழ்வையும் வரப்பிரசாதமாக வாரி வழங்கும் திருக்கோயில் ப்ரம்ம சக்தி ஆலயம்.
எல்லா ஸ்தலங்கள் போலவே இத் திருக்கோயிலுக்கும் ஒரு சிறப்பான வரலாறு உண்டு. தற்போது ஆலயம் உள்ள இடத்தில் வீடு இருந்தது. அதில் புற்று ஒன்று பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. இந்த புற்றிலிருந்து வெளிப்பட்ட சக்தி வாய்ந்த ஒளியிலிருந்து ஒரு ஒளிக்கற்றை ஒரு பெண் உருவில் போய் சேர்ந்தது. அந்த பெண் உருவமே “ப்ரம்ம ஸ்ரீ பாலா அம்மா”.
ஆலயம் ஒன்று அமைய வேண்டும் என்ற அம்பிகையின் உள்ளக்கிடக்கை அம்மாவின் அருள்வாக்கினால் வெளிப்பட்டு அதன் படி இந்த இடத்தில் 2001-ல் ப்ரம்ம சக்தி ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது.
பொதுவாக ஆகம விதிகள், வாஸ்து சாஸ்திரம், சிற்ப சாஸ்திரம் ஆகியவற்றில் சொல்லப்பட்டுள்ள விதிகளின் படி ஆலயங்கள் கட்டுவது மரபாக இருந்து வருகின்றது. ஆனால் இந்த ஆலயத்தை பொருத்த மட்டில் ஆலயம் அமைய வேண்டிய இடம், ப்ரதிஷ்டை செய்யப்பட வேண்டிய மூர்த்தங்கள், பூஜா முறைகள் பற்றிய எல்லா விவரங்களையும் அம்மாவே தனது அருள்வாக்கின் மூலம் வெளிப்படுத்தினார்கள். அதன் படி இந்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ளதே இதன் சிறப்பு அம்சமாகும்.